search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை வழக்கு"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
    • வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

    இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.
    • ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .

    சேலம்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

    இதற்கிடையில் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் புகார் கூறி வருகிறார். அவர் இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை தான் வெளியிட்டதால் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டிடம் என் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் அதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நான் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி மருத்துவரும் குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரங்களை தர தயாரா?.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல மனநிலையோடு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
    • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

    நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
    • தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
    • இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை வடபழனி மன்னாா் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் தீபக் உள்பட 2 பேரை கத்திமுனையில் கட்டிபோட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக சையது ரியாஸ் (22) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை இல்லாத பட்டதாரி நண்பர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை பெரியார் நகர், ஆழ்வார் திருநகர் அண்ணா சாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (21), அவரது நண்பரான கிஷோர் கண்ணன் (23) ஆகிய இருவரும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த தினேஷ், சந்தோஷ் ஆகிய மேலும் இருவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
    • இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.

    இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த அருணாச்சலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோரை கட்டிப்போட்டு 140 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சததிரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×